திருநெல்வேலி:நெல்லை மாநகரப் பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டட வேலைகளால் ஏற்பட்ட கழிவுகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கழிவுநீரை கால்வாயில் கொட்டக்கூடாது. அவ்வாறு உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் அல்லது மாநகராட்சியால் அகற்றப்படும்.
இவ்வாறு அகற்றப்படும் பொருட்கள் திருப்பி தரப்பட மாட்டாது எனவும், மேலும் ஆக்கிரப்பு அகற்றுவதற்கான செலவுகளையும் அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ் நேற்றைய முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், நேற்று (ஜன.4) திருநெல்வேலி மாநகரப் பகுதியான வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் தொடங்கினர்.
மாநகராட்சி அதிகாரிகள் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள், அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைகள், கடைகளில் உள்ள மேற்கூரைகள், விளம்பரப் பலகைகள் என அனைத்தையும் அகற்றினர். மேலும், தனியார் நிறுவனத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரை உடனடியாக அகற்ற வலியுறுத்தியதோடு, அவற்றுக்கு அபராதத் தொகையும் விதித்தனர்.