தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 9, 2023, 1:36 PM IST

Updated : May 9, 2023, 2:18 PM IST

ETV Bharat / state

அமைச்சர் துரைமுருகன் முன்பு அடித்துக்கொண்ட திமுகவினர்.. நெல்லையில் பரபரப்பு!

திருநெல்வேலியில் அமைச்சர் துரைமுருகன் முன்பு, நடுரோட்டில் வைத்து மாவட்டச் செயலாளர் மற்றும் மாநகர செயலாளர் தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் துரைமுருகன் முன்பு மோதிக் கொண்ட திமுகவினர்... தொடரும் நெல்லை திமுக உள்கட்சி பூசல்
அமைச்சர் துரைமுருகன் முன்பு மோதிக் கொண்ட திமுகவினர்... தொடரும் நெல்லை திமுக உள்கட்சி பூசல்

நெல்லையில் அமைச்சர் துரைமுருகன் முன்பு, நடுரோட்டில் வைத்து மாவட்டச் செயலாளர் மற்றும் மாநகர செயலாளர் தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருநெல்வேலி: நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் உள்கட்சி பூசல் பல மாதங்களாக இருந்து வருகிறது. மாநகரச் செயலாளராக சுப்ரமணியன் என்பவர், மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்பால் நியமிக்கப்பட்டார். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் - அப்துல் வகாப் இருவரும் எதிரெதிர் அணியாக செயல்படத் தொடங்கினர்.

அதேநேரம், ஏற்கனவே மாவட்டச் செயலாளருக்கு எதிரணியாக செயல்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜாவுடன் மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் கை கோர்த்ததாகவும், தற்போது இருவரும் சேர்ந்து மாவட்டச் செயலாளருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்பால், 6வது வார்டில் கவுன்சிலராக வென்ற சரவணன் நெல்லை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், வாய்ப்பு வழங்கியவர் என்ற முறையில் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை மேயருக்கு விதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மேயரின் வீட்டு பத்திரத்தை வாங்கி வைத்து மிரட்டியதாகவும் பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில் மாவட்டச் செயலாளரின் நடவடிக்கைகளை பிடிக்காத மேயர் சரவணன் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்ததாகவும், இதனால் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக கோஷமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். மேலும், மேயரை மாற்றக் கோரி மாவட்டச் செயலாளர் ஆதரவு கவுன்சிலர் 30க்கும் மேற்பட்டோர் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து மனு அளித்தனர்.

இதில் துணை மேயர் ராஜுவும் மாவட்டச் செயலாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பதும் கூடுதல் தகவல். இதனிடையே மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியனுடன் மேயர் கைகோர்த்ததாக கூறப்பட்ட நிலையில், நெல்லை வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்பு மாவட்டச் செயலாளர் மற்றும் மாநகர செயலாளர் சுப்ரமணியன் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் நடைபெற்று வரும் நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, அமைச்சர் துரைமுருகன் நெல்லை வந்தார். பொன்னாக்குடி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பணியை முடித்துக் கொண்டு அவர் நெல்லை புதிய பேருந்து நிலையம் வழியாக அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.

அப்போது புதிய பேருந்து நிலையத்தின் அருகே, நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ தலைமையில், அவரது ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். அதேபோல் மேயர் சரவணன் மற்றும் மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர்.

இரு தரப்பினரும் சுமார் 10 அடி இடைவெளியில் நின்ற நிலையில், அமைச்சர் துரைமுருகன் அங்கு வந்த உடன் முதலில் மாவட்டச் செயலாளர் அவரை வரவேற்றார். அப்போது மாநகர செயலாளர் தங்கள் ஆதரவாளர்கள் உடன் அமைச்சர் அருகில் செல்ல முயன்றபோது, மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து அவர்கள் செல்ல முயன்றபோது மாவட்டச் செயலாளர் ஆதரவாளர்கள் மற்றும் மாநகர செயலாளர் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். குறிப்பாக அமைச்சர் வரவேற்புக்காக கொண்டு வரப்பட்ட சரவெடிகளை மேயர் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆதரவாளர்கள் நின்று கொண்டிருந்த பகுதியை நோக்கி தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அங்கிருந்த பெண்கள் உள்பட சிலர் மீது வெடி விழுந்ததில் அவர்கள் பதட்டமாகினர். மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியனின் நெருங்கிய ஆதரவாளரான பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரையை மாவட்டச் செயலாளர் அப்துல்வகாப் ஆதரவாளரான மாநகராட்சி மண்டல தலைவர் ஒருவரின் கணவர் என்பவர் அரைந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:"அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாத நெல்லை மாநகராட்சிக்கு நன்றி" - திமுக கவுன்சிலர் போஸ்டரால் பரபரப்பு!

Last Updated : May 9, 2023, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details