தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநராலும் பாஜகவாலும் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை - கனிமொழி - திமுக எம்பி கனிமொழி

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, ஆளுநராலும் பாஜகவாலும் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறினார்.

dmk mp kanimozhi  kanimozi interview  kanimozhi press meet at thirunelveli  திருநெல்வேலியில் செய்தியாளர்களிடன் பேசிய திமுக எம்பி கனிமொழி  திமுக எம்பி கனிமொழி  கனிமொழி செய்தியாளர் சந்திப்பு
கனிமொழி

By

Published : Apr 23, 2022, 6:07 PM IST

திருநெல்வேலி:திமுக மகளிரணி சார்பில் தலைநிமிர்வோம் தடம்பதிப்போம், களம்காண்போம் என்ற தலைப்பில் இளைம்பெண்கள் திமுகவில் இணையும் நிகழ்வு, வள்ளியூரில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புதிதாக திமுக மகளிரணியில் இணைந்த இளம்பெண்களுக்கு உறுப்பினர் படிவங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தச் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது திராவிட இயக்கம்.

ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்பட்டன. இந்த நிலையை மாற்றி சமநிலையை, சமூக நீதியை உருவாக்கியது திராவிட இயக்கம்தான். இதற்காக தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பல போராட்டங்கள் நடத்தி சிறை சென்று, பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர்.

இன்று மத்தியில் ஆளும் அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு குழு அமைத்துள்ளது. ஆனால் அந்தக் குழுவில் பெண்களுக்கு வாய்பளிக்கப்படவில்லை. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் குரல் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும், உங்கள் பிரச்சினைகள், உங்கள் தேவைகள், கருத்துக்கள் ஆகியவற்றை பதிவு செய்து புதிய பாதையை உருவாக்க வேண்டும்.

இன்று மதம், சாதி ஆகிய சக்திகளால் நாம் பின்னோக்கி இழுக்கப்படும் நிலை உள்ளது. இதனை எதிர்த்து பெண்கள் பெரும் படையாக திரளவேண்டும்” எனக் கூறினார்.

செய்தியாளர்களிடன் பேசிய திமுக எம்பி கனிமொழி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம், மின்தட்டுபாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இதுகுறித்து உரிய விளக்கத்தை அமைச்சர் சட்டப்பேரவையிலே கூறியுள்ளார் எனவும், விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்து பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை சிலர் கூறுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியபோது, “ஆளுநராலும் பாஜகவாலும் தான் தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு இல்லை. மாணவ சமுதாயத்தின் எதிர் காலத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரி வரும் அமித்ஷா - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details