திருநெல்வெலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிமனோகரனுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற வலுவான கூட்டணியாகக் களத்தில் இறங்கியுள்ளது.
ஆனால், பாஜக எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் செய்யும் ஊழல்களை வைத்து அவர்களை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர். பாஜக தேர்தல் ஆணையம், வருமானவரித் துறை ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் மிரட்டுகிறது.
இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது மக்களைப் பார்க்கும்போது தெரிகிறது. பாஜக மக்களுக்கு எதிரான வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை அமல்படுத்தி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளது. தமிழ்நாட்டில், ஒரு எம்எல்ஏ, எம்பிகூட இல்லாத நிலையில் தமிழ்நாட்டை பாஜக ஆட்சி செய்துவருகிறது. புதுச்சேரியைப்போல் தமிழ்நாட்டையும் மாற்ற நினைக்கிறது.