திருநெல்வேலி: தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம். தென் தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி பெரிய நிறுவனங்களை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் அமைந்திருக்கும் அவருடைய மணி மண்டபத்தில் அமைந்துள்ள திரு உருவ சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது: விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன். 1857ஆம் ஆண்டு் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகிறார்கள். ஆனால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வீரம் விளைந்த இந்த நெல்லை மண்ணில் ஏராளமானோர் இந்திய சுதந்திரத்திற்காக போராடி இருக்கிறார்கள். அதை இளைய தலைமுறை இடையே கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்றார்.
கன்னியாகுமரியில் திமுக குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறு பரப்பியதாக உங்கள் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் புகார் அளித்து உள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் திமுகவின் பொய்யை தோலுரித்துக் காட்டுவதை அவதூறு பரப்புவதாக திமுகவினர் கூறுகிறார்கள். என்ன அவதூறு பரப்பினேன்? யார் குறித்து அவதூறு பரப்பினேன் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். நான் பேசியது அவதூறு என்றால், ராமநாதபுரம் மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது அவதூறு இல்லையா? நாடாளுமன்ற திறப்பு விழாவில், செங்கோலுக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜை முதலில் கைது செய்யப்பட வேண்டும். திமுகவின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்படப் போவதில்லை. யார் மரியாதையாக பேசுகிறார்கள், யார் மரியாதைக்குறைவாக பேசுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அரசியலில் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவன் நான். சில நேரங்களில் திமுகவிற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது.