திருநெல்வேலி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநில தலைவர் அண்ணாமலை 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய மக்களை ஒன்றிணைக்கும் விதமாக 'என் மண் என் மக்கள்' (En Mann En Makkal Padayatra) என்ற பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கினார். அதை மத்திய அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் யாத்திரையை மேற்கொண்டார். அதில் நேற்று காலை பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி முடித்த பின்னர் இரவு கல்லிடைக்குறிச்சியில் நடைப்பெற்ற யாத்திரையில் கலந்து கொண்டார். கல்லிடைக்குறிச்சியில் யாத்திரை செல்லும் வழியில் தொண்டர்கள் அப்பளத்தினாலான மாலை அணிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அசாம் ஆட்டினை கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் பரிசாக வழங்கினார். அந்த ஆடு சினையாக உள்ளது என கூறியதால், திரும்பி செல்லும் போது வாங்கி கொள்வதாக கூறிவிட்டு யாத்திரையை தொடர்ந்தார் அண்ணாமலை. தொடர்ந்து, தாமிரபரணி ஆறு மாசு அடைவதாக கூறிய நிலையில், கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றையும் அண்ணாமலை பார்வையிட்டார்.