திருநெல்வேலி: பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(ஜூன் 22) திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நாடு நல்லாயிருக்க வேண்டுமெனில், வீடு நல்லாயிருக்க வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடலைப் போல பிரதமர், வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஆனால், தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை எனச் சொல்லி வருகிறார்.
இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலை வாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அமலாக்கதுறை தனி நிர்வாகம். பழி வாங்கும் நோக்கில் அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தவில்லை. தமிழக அரசு முதலமைச்சர் பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்தால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் தமிழக அரசு உள்ளது. அதனால், பாஜக நிர்வாகிகளை கைது செய்கின்றனர்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சர் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆசைப்படுவது தவறில்லை. விஜய் உள்ளிட்ட யார் வந்தாலும், கூட்டணிக்கு அழைப்போம்.