தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருந்ததி ராய் புத்தகம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கம் - கல்வியாளர்கள் கண்டனம்!

திருநெல்வேலி: மனோன்மணியம் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்" புத்தகம் நீக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

By

Published : Nov 12, 2020, 2:22 PM IST

walking with the comrades
walking with the comrades

பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்" (Walking with the Comrades) என்ற புத்தகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. முதுகலை ஆங்கிலம் படிப்பிற்கான மூன்றாவது பருவத்தேர்வில் இந்த புத்தகம் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் செயல்களை நியாயப்படுத்துவதாகவும், அரசியல் பின்னணி குறித்து எழுதப்பட்டுள்ளதாக ஏபிவிபி அமைப்பு குற்றஞ்சாட்டியது.

ஏபிவிபி அமைப்பின் தமிழ்நாடு இணைசெயலாளர் விக்னேஷ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியை தொடர்புகொண்டு "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்" புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்" புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தை, சாதாரண ஒரு மாணவர் அமைப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக நீக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி, கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் இந்த நடவடிக்கைக்கு நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நாறும் பூநாதன் கூறுகையில், "எழுத்தாளர் அருந்ததிராய் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்" (Walking With The Comrades) புத்தகத்தில் ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலை குறித்தும் அவர்கள் வசிக்கும் பகுதியில் இரும்புத்தாது உள்ளிட்ட கனிம தாதுக்களை தனியார் நிறுவனங்கள் சுரண்டுவது குறித்தும் அதில் எழுதப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை பாஜகவின் மாணவர் அமைப்பினர் கொடுத்த அழுத்தம் காரணமாக நீக்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த பாடப் புத்தகத்தை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய பாடத்திட்ட குழுவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் கூறியுள்ளனர். மாணவர்கள் ஜனநாயக பூர்வமாக அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தப் புத்தகம் சேர்க்கப்பட்டது. ஆனால் நெருக்கடி மூலமாக புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்கள் கல்வித்துறையில் ஆளுங்கட்சியின் ஊடுறுவல் அதிகமாகி இருப்பதை காட்டுகிறது.

அருந்ததி ராய் புத்தகம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கம்

இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. இந்த பாடத்திட்டத்தை நீக்கிவிட்டு மாதவையா என்பவரின் மகன் மா.கிருஷ்ணன் என்பவர் எழுதிய மை நேஷன் என்ற புத்தகத்தை சேர்த்துள்ளனர். பாஜகவினர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் கல்வித்துறையைதான் குறி வைக்கின்றனர். இடதுசாரி சிந்தனைகளை பிரதிபலிக்கக் கூடிய புத்தகத்தை நீக்குவதற்கு என்று ஆளுங்கட்சியில் ஒரு குழு வைத்துள்ளனர். இந்த செயலுக்கு எழுத்தாளர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க:வேளாண் சட்டத்தை எதிர்த்து நாகையில் 50 இடங்களில் போராட்டம் - எம்பி செல்வராஜ்

ABOUT THE AUTHOR

...view details