தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 15, 2023, 8:21 PM IST

ETV Bharat / state

'போகாத ஊருக்கு டிக்கெட்' - மன உளைச்சலுக்கு ஆளான பயணிகள்

போகாத ஊருக்கு டிக்கெட் வழங்கிய ரயில்வே நிர்வாகத்தால், பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

மன உளைச்சலுக்கு ஆளான பயணிகள்
மன உளைச்சலுக்கு ஆளான பயணிகள்

மன உளைச்சலுக்கு ஆளான பயணிகள்

திருநெல்வேலி:ஏழை எளிய நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவையில் ரயில் பயணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அவர்களின் வசதிக்காக அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

’ஏழைகளின் ரதம்’ என்று அழைக்கப்படும் அந்தியோதயா ரயிலில், அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இயக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரத்திலிருந்து இருந்து நாகர்கோவில் வரை நாள்தோறும் இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று (பிப்.15) வழக்கம் போல் திருநெல்வேலி வந்தடைந்தது.

அப்போது திடீரென நீண்ட நேரம் ரயில், அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டதால் நாகர்கோவில் செல்ல வேண்டிய பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது, 'இந்த ரயில் இன்று திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரை பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, எனவே அனைவரும் மாற்று வண்டியில் செல்லுங்கள்' என்று தெரிவித்துள்ளனர்.

டிக்கெட் எடுக்கும் போது, கவுன்ட்டர்களில் இது குறித்து எந்த ஒரு முன் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் கூறுகின்றனர். மேலும் இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே ஊழியர்களிடம் முறையிட்டனர். இதையடுத்து நாகர்கோவில் செல்ல வேண்டிய பயணிகளுக்கு குறிப்பிட்ட தொகை திரும்ப அளிக்கப்பட்டது. இருப்பினும், தாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பயணிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயிலில் பயணித்த பயணி கவியரசு, “ரயில் ரத்து செய்யப்பட்டதாக திடீர் என தெரிவிக்கின்றனர். கவுன்ட்டரில் சென்று கேட்டால், எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது, நீங்கள் எங்கே டிக்கெட் வாங்குனீர்களோ அங்கே கேளுங்கள் என்று அலட்சியமாக கூறுகின்றனர்.

ரயில் முன்பே ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர். அப்படி என்றால் ஏன் நாகர்கோவிலுக்கு டிக்கெட் கொடுத்தார்கள். பலர் குழந்தைகளுடன் வந்துள்ளனர். டிக்கெட் பணம் திரும்ப கொடுக்கப்பட்டாலும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு உரிய பதில் சொல்ல வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரித்தபோது நெல்லை டூ நாகர்கோயில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மார்ச் 3ஆம் தேதி பல்லவன் விரைவு ரயில் வழக்கம் போல் இயங்கும்!

ABOUT THE AUTHOR

...view details