தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்சலுக்கு கூடுதல் பணம் கேட்ட அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்.. நெல்லையில் நடந்தது என்ன? - thirunelveli perunthu

செல்போன் பார்சல் எடுத்து வர 400 ரூபாய் அதிகம் கேட்ட பஸ் டிரைவரை கதற விட்ட நெல்லை இளைஞர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பணம் கொடுத்தும் பார்சலை தர மறுத்து ஓட்டுனர், நடத்துனர் தகராறு!
பணம் கொடுத்தும் பார்சலை தர மறுத்து ஓட்டுனர், நடத்துனர் தகராறு!

By

Published : May 11, 2023, 9:11 AM IST

பணம் கொடுத்தும் பார்சலை தர மறுத்து ஓட்டுனர், நடத்துனர் தகராறு!

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் ஆவார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். திருப்பூரில் உள்ள ஒரு மொபைல் கடையில் குறைந்த விலையில் மொபைல் போன் கிடைப்பதாக அறிந்த சுரேஷ்குமார், அந்த கடையில் செல்போன் ஆர்டர் போட்டுள்ளார். கொரியர் சர்வீசில் அனுப்பி வைத்தால், மொபைல் போன் சுரேஷ்குமாருக்கு கிடைக்க மூன்று தினங்கள் ஆகும் என்பதால் கடை உரிமையாளர் கோவை அரசு போக்குவரத்து கழக பேருந்து எண்-TN 39 N 0398 என்ற பேருந்தில் நடத்துனர் சரவணகுமார் என்பவரிடம் செல்போனை பார்சல் செய்து கொடுத்துள்ளார்.

கடையின் உரிமையாளர் நடத்துனர் சரவணகுமாரிடம் ரூ.200 கொடுத்துவிட்டு மீதி 200 ரூபாயை நெல்லையில் இதனை பெற்றுகொள்ளும் சுரேஷ்குமாரிடம் வாங்கிக் கொள்ளுமாறு சொல்லியதாக தெரிகிறது. இதனை சுரேஷ்குமாரிடம் செல்போன் மூலமாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். பேருந்து தாழையூத்து பகுதிக்கு வரும்போது சுரேஷ்குமார் பேருந்தை நிறுத்தி செல்போனை வாங்கி கொண்டு 200 ரூபாய் கொடுத்துள்ளார். அதற்கு நடத்துனர் 600 ரூபாய் தர வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சுரேஷ்குமார் ரூபாய் 200 பணம் கொடுத்தால் போதும் என கடை உரிமையாளர் செல்போனில் தகவல் சொன்னதாக தெரிவித்துள்ளார்.ஆனால், நடத்துனர் சரவணகுமார் 200 ரூபாய் வாங்க மறுத்து 600 ரூபாய் கேட்டு நிர்பந்தம் செய்துள்ளார். இந்த நிலையில், பேருந்தில் இருந்து ஓட்டுனர் இறங்கி வந்து சுரேஷ்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று வண்டியில் ஏறி விட்டார். இதனைப் பார்த்து அதிர்ந்த சுரேஷ்குமார் தனது இருசக்கர வாகனத்தை கொண்டு அந்தப் பேருந்தை வழிமறித்து நிறுத்தினார்.

மேலும், அங்கு சுமார் அரை மணி நேரம் இந்த வாக்குவாதம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பேருந்தில் இருந்த பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், அந்த பகுதியில் பொதுமக்கள் கூடி சுரேஷ்குமாருக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தவுடன் சுரேஷ்குமார் நடத்துனரிடம் பேருந்து கட்டணத்திற்கான டிக்கெட்டை தாருங்கள் என தெரிவித்துள்ளார். பேருந்து நடத்துனர் சுதாரித்துக் கொண்டு 400 ரூபாய்க்கு டிக்கெட்டை கொடுத்துள்ளார். மேலும் வாக்குவாதம் முற்றியதுடன் கூடுதலாக 170 ரூபாய்க்கான டிக்கெட்டை கொடுத்துள்ளார். மொத்தம் 570 டிக்கெட் கொடுத்து விட்டு 600 ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் கொரியர் சர்வீஸ் செயல்பட்டு வரும் நிலையில் சில நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் சுயலாபத்திற்காக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட முறையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு செயல்படுவதால் பொதுமக்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, போக்குவரத்து கழக நிர்வாகம் தனிப்பட்ட முறையில் லக்கேஜ் எதையும் வாங்க கூடாது என்றும், கொரியர் சர்வீஸ் மூலமாகவே பொருட்களை வாங்கினால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகளின் கீழ் பின்னூட்டங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:"ரூ.1 லட்சம் கோடி மதுபான ஊழல்" - மு.க.ஸ்டாலின் அரசு மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details