தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

80 வயது மூதாட்டியை துன்புறுத்தும் பேரன்! மனு கொடுக்க வந்த இடத்தில் உதவிய அரசு ஊழியர்.. நெகிழ்ச்சி சம்பவம்!

பணத்துக்காக அடித்து துன்புறுத்தும் பேரனிடமிருந்து பாதுகாப்பு கேட்டு குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 80 வயது மூதாட்டியை அங்கிருந்த அரசு ஊழியர்கள் அரவணைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

By

Published : Jul 24, 2023, 8:13 PM IST

பாதுகாப்பு கேட்டு குறை தீர்க்கும் நாளில் மனு
80 வயது மூதாட்டியை துன்புறுத்தும் பேரன்

80 வயது மூதாட்டியை துன்புறுத்தும் பேரன்

திருநெல்வேலி:தமிழ்நாட்டில் அனைத்து ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீர் முகாமில் ஆட்சியர் மனுக்களை பெற்று தீர்வளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று (ஜூலை 24) திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மனு அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர்.

அதன் அடிப்படையில் வழக்கம்போல் ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதியில் காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. அப்போது மெலிந்த உடலோடு 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்க்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார்.

இந்த நிலையில் 80 வயதில் மூதாட்டிக்கு அப்படி என்ன பிரச்னை என்று அவரிடம் விசாரித்த போது கண்ணீர் மல்க அவரது பிரச்னைகளை தெரிவித்தார். மூதாட்டியின் பெயர் வடிவம்மாள் (80) என்பதும் இவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியில் வசித்து வருவதும் விசாரித்ததில் தெரியவந்தது.

மூதாட்டியின் கணவர் ஈஸ்வரன் இறந்து விட்டதாகவும், இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தனது ஒரே மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் என்பது தெரியவந்தது. எனவே கக்கன் நகர் வீட்டில் வடிவம்மாள் தனியாக வசித்து வருகிறார். அரசின் முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயை வைத்து கொண்டு வடிவம்மாள் தனது கடைசி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க:வேடசந்தூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் பிடிபட்ட 3 அடி நீள நாகம்!

இந்த நிலையில் வடிவம்மாளின் மகன் வழி பேரனான ராஜதுரை சரிவர பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுவதாக கூறப்படுகிறது. மேலும் ராஜதுரை அடிக்கடி வடிவம்மாளிடம் பணம் கேட்டு அவரை அடித்து துன்புறுத்துவதாகவும் தான் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜதுரை திருடிச் சென்று விட்டதாகவும் வடிவம்மாள் வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் பணம் கொடுக்க மூதாட்டி மறுத்ததால் ராஜதுரை வடிவம்மாளின் வீட்டில் கல்லை எரிந்து கொடுமைப்படுத்துவதாகவும் கூறினார். எனவே மூதாட்டி வடிவம்மாள் தனது பேரனிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஆட்சியரை சந்திக்க வந்தார். இதற்கிடையில் மூதாட்டியின் வயோதிக நிலையை அறிந்து அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன் வடிவம்மாளை கைப்பிடித்து முகாம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

மேலும் முகாமில் மனு கொடுக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள கணினி மையத்தில் தங்கள் விவரத்தை பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டும். மையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் வடிவம்மாளை ஓரமாக அமர வைத்துவிட்டு அனந்த ராமகிருஷ்ணன் தானே வரிசையில் நின்று சுமார் அரை மணி நேரம் காத்திருந்து மூதாட்டி வடிவம்மாளின் மனுவை பதிந்து கொடுத்தார்.

பின்னர், மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வழக்கை காவல் துறைக்கு மாற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து மூதாட்டியை அனந்த ராமகிருஷ்ணன் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றார். வயதான காலத்தில் பேரனால் கொடுமைப்படுத்தப்படும் வடிவம்மாளின் நிலை கண்ணீரை வரவழைத்தாலும் சற்று ஆறுதலாக அரசு ஊழியர் அவருக்கு உதவி செய்த சம்பவம் அப்பகுதியினரிடயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:Honour Killing:நெல்லையில் ஆணவ கொலை? வேற்று சமூகப் பெண்ணை காதலித்த இளைஞர் சடலமாக மீட்பு

ABOUT THE AUTHOR

...view details