தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் உலா 2021 : நட்சத்திரத் தொகுதிகள் - போடிநாயக்கனூர்...!

கடந்த 1989 ஆம் ஆண்டு தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா, சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரான போது கவனம் பெற்றது போடிநாயக்கனூர் தொகுதி. தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் நடந்த இரண்டு தேர்தல்களிலும் போடி தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்டார். தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சராக, மூன்றாவது முறையாக ஓபிஎஸ் போட்டியிட இருப்பதால் நட்சத்திர அந்தஸ்தை பெறுகிறது போடிநாயக்கனூர்.

போடிநாயக்கனூர்
நட்சத்திரத் தொகுதிகள்

By

Published : Mar 6, 2021, 5:22 PM IST

தோரணம்:

தொகுதிகள் மறுசீரமைப்பின் போது, அதுவரை தான் போட்டியிட்டு வந்த பெரியகுளம் தொகுதி தனித்தொகுதியாக மாற்றப்பட்டதால், அதிமுகவின் வாக்கு வங்கியை நம்பி போடிநாயக்கனூரில் நின்று தேர்தலைச் சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம். கடந்த 2011, 2016 தேர்தல்களில் நின்று வெற்றி பெற்ற ஓபிஎஸ், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, மூன்றாவது முறையாகவும் போடி தொகுதியில் இருந்து மீண்டும் களம் காண்கிறார்.

களம்:

பெரியகுளத்திலிருந்து 40 கி.மீ., தள்ளிச் சென்று கல்வி பயின்றதன் வலியை உணர்ந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், போடிநாயக்கனூர் தொகுதிக்குள் அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்விச் சாலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்.

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 18ஆம் கால்வாய் திட்டத்தைப் போடி வரை நீட்டித்திருக்கிறார் ஓபிஎஸ். பெரியகுளம் நகராட்சி தலைவராக, கடந்த 1991 - 2001 வரை பதவி வகித்து வந்த ஓ. பன்னீர் செல்வம், 2001 ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் உலா 2021 : நட்சத்திரத் தொகுதிகள் - போடிநாயக்கனூர்...!

அந்த ஆண்டு டான்சி வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறை சென்றதும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2006ல் பெரியகுளத்தில் போட்டியிட்டு வென்று எதிர்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு வகித்தார். தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர், பெரியகுளம் தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட, சமுதாய, அதிமுக வாக்கு வங்கியை நம்பி போடிநாயக்கனூரில் போட்டியிட்டு வருகிறார். தற்போது மூன்றாவது முறையாகப் போட்டியிட இருக்கிறார்.

அதிமுகவில் இருந்த அமமுகவிற்கு மாறி தற்போது திமுகவில் அங்கம் வகிக்கும் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளரான தங்கதமிழ்செல்வன், ஓபிஎஸ்ஐை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அமமுகவின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேனியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்திருப்பது ஓபிஎஸ்-க்கான கூடுதல் அச்சுறுத்தலே. இருந்தாலும் தொகுதியில் தன் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையில் 'ஹாட்ரிக்' வெற்றிக்காக களம் காண்கிறார் ஓபிஎஸ்

நிலவரம்:

கேரள-தமிழ்நாட்டு எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கிறது போடிநாயக்கனூர் தொகுதி. பிரதான தொழில் விவசாயம். கேரளாவிற்கு அடுத்து ஏலக்காய் வர்த்தகத்திலும், மா உற்பத்தியில் சேலத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் போடியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை.

குரங்கனி உள்ளிட்ட மலைகிராமங்களில் சாலை வசதிகள் இல்லாதது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தராதது, நியூட்ரினோ திட்டத்தால் மக்கள் மத்தியில் உள்ள அச்சம், மாநில அரசின் பரிந்துரையால் 7 பிரிவு மக்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க, மத்திய அரசு மசோதா தாக்கல் செய்திருப்பது என்பவைகள் பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், தொகுதியிலுள்ள கட்சியினரின் இல்ல சுக, துக்க நிகழ்வுகளில் பங்கேற்பது, கட்சியின் ஒருக்கிணைப்பாளராக ஆன பின்னர் கட்சியினிரிடையே கலந்தாலோசனை செய்வது தொகுதிக்குள் பேசப்படுவராக ஓ.பி.எஸ்ஐை வைத்திருக்கிறது.

இவற்றைத் தாண்டி களப்பணி, தேர்தல் வியூகம், பணபல பராக்கிரமம் மூன்றாவது முறையாகவும் ஓபிஎஸ்-ஐை வெற்றிபெற வைக்கலாம் என்கின்றனர் அரசியல் ஆரூடர்கள்.

ABOUT THE AUTHOR

...view details