தமிழ்நாடு

tamil nadu

மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 11:04 AM IST

Vaigai Dam Water Open: மதுரை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்காக தேனி வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Vaigai Dam Water Open
மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி: ஆண்டிப்பட்டி அருகே பெரியகுளத்தில் உள்ள 71 அடி உயரம் கொண்டது, வைகை அணை. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் கிட்டத்தட்ட முழுக் கொள்ளளவான 70 அடியை எட்டியது. அணையில் நீர் மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக பாசனக்கால் வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் வைகை அணையின் பூர்வீக பாசனப் பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட தண்ணீர் தேவைக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, வைகை பூர்வீக பாசனப் பகுதிகள் 1, 2, 3 பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து, முதற்கட்டமாக வைகை பூர்வீக பாசனப் பகுதி 3-இல் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, கடந்த நவ.23-ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக வைகை பூர்வீக பாசனப் பகுதி 2-இல் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த டிச.1-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்ந நிலையில், 3ஆம் கட்டமாக வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட தண்ணீர் தேவைக்காக இன்று காலை 6 மணி முதல் விநாடிக்கு சுமார் 1,500 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து மொத்தமாக 343 மில்லியன் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. அதன்படி, முதல் 2 நாட்களுக்கு விநாடிக்கு 1,500 கனஅடியும், 3வது நாளில் 970 கன அடியும் திறக்கப்பட உள்ளது.

கடந்த நவ.23-ஆம் தேதி முதல் தற்போது வரையில் வைகை அணையில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 466 மில்லியன் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சோழபுரம் பைரவேஸ்வரர் கோயிலில் விசேஷ திருக்கல்யாணம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details