தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
மேலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்ததால், வைகை அணையின் நீர்மட்டம் நேற்று (ஜனவரி 15) 66அடியை எட்டியது. இதனால், கரையோர பகுதி மக்களுக்கு நேற்று முன்தினம் (ஜன. 14) முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து நேற்றிரவு 9 மணியளவில் 68.50அடியை எட்டியது. இதனால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.