தேனி:கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்டோரை கொன்று, மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த (Ari Komban) அரி கொம்பன் என்கிற ஒற்றை காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர்.
இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தி தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயில் அருகே உள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் கொண்டு போய்விட்டனர். அங்கிருந்து தமிழ்நாடு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த (Ari Komban) அரி கொம்பன் யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.
இதனால், மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அங்கிருந்து மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட இரவங்களாறு, மணலாறு ஆகிய பகுதிக்குள் வலம் வந்த யானை அங்கிருந்து, கடந்த மே 26ஆம் தேதி இரவு ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
பின்னர், கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து அட்டகாசம் செய்வதாக விவசாயிகள் மூலம் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த தமிழ்நாடு, கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்குள் யாரையும் செல்ல விடாமலும், யானையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, யானையை அப்பகுதியிலிருந்து விரட்ட பொள்ளாச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட சுயம்பு மற்றும் முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகளுடன் வனத்துறையினர் சுருளி பகுதிக்குள் காத்திருந்தனர். இதனிடையே, யானை கண்காணிப்பதாக ட்ரோன் பறக்க விட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கம்பம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து தடை விதித்தும் கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை விதித்தும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.