தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 16, 2019, 1:26 PM IST

ETV Bharat / state

வராக நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Theni Vaaga river flood alert

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் என மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் நேற்றிரவு கன மழை பெய்தது. மாவட்டத்தில் மொத்தம் 16.2 மி.மீ மழை பதிவானது. இதனால் முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிதுள்ளது.

இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய சோத்துப்பாறை அணை, கல்லாறு, அகமலை, கும்பக்கரை அருவி உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. 126அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை ஏற்கனவே நிரம்பி வழிகின்ற நிலையில், தற்போது அணைக்கு வந்துகொண்டிருக்கும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல கும்பக்கரை அருவி, கல்லாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்பட்ட நீர்வரத்தால், பெரியகுளம் நகரின் மத்தியில் செல்லக்கூடிய வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகின்றது.

வராக நதியில் வெள்ளப்பெருக்கு

இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட வராக நதியின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வராக நதியில் அதிகளவு தண்ணீர் செல்வதால், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து கிலி ஏற்படுத்திய யானைக் கூட்டம் விரட்டியடிப்பு

ABOUT THE AUTHOR

...view details