தேனி: போடிநாயக்கனூரில், உரியப் பராமரிப்பு இல்லாமலும், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வருகை இல்லாமலும், உழவர் சந்தையானது வெறும் பெயரளவிற்கு இயங்கி வருகிறது. ஆட்கள் வராத சந்தையில் காய்ந்துபோன காய்கறிகளுடன் உள்ள ஒரு கடைக்கு, தினமும் விலை பட்டியலிட்டு அரசு அதிகாரிகள் ஏமாற்றுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில், டிவிகேகே நகர் 100 அடி சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. சந்தை தொடங்கப்பட்டபோது அனைத்து கடைகளும் இயங்கிவந்த நிலையில், பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நகர்ப் பகுதியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த உழவர் சந்தை, கடந்த சில வருடங்களாகச் செயல்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் உழவர் சந்தையைச் செயல்படுத்த வேண்டும் என்ற அரசு உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 21 கடைகள் இருந்த உழவர் சந்தையானது உரியப் பராமரிப்பு, அடிப்படை வசதிகள், போக்கு வரத்து வசதிகள் இல்லாமல், தற்போது ஒரே ஒரு காய்கறி கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.
மேலும், விவசாயத் துறை சார்ந்த அரசு அதிகாரி ஒருவர், உழவர் சந்தைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவருக்கு உதவியாளர் ஒருவரும் இங்கு பணியாற்றி வருகின்றனர். காய்கறி வாங்க ஆட்கள் வராத உழவர் சந்தையில், தினமும் அலுவலகம் திறக்கப்பட்டு, காய்கறிகள் விலைப்பட்டியல் இடப்பட்டு பெயரளவிற்கு ஒரே ஒரு கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.