தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் சார்பில் இன்று (நவ.10) காவல் சிறுவர் மன்றம், சிறார் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, இந்த விழாவில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி கலந்த கொண்டார்.
பின்னர் அவர் காவல் சிறுவர் மன்றம், சிறார் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்விழாவில் காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி பேசியதாவது, "மாணவ, மாணவியர்களின் நேரத்தையும், திறமையும் பயனுள்ளதாக ஆக்கும் வகையில், இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதோடு தீய செயல்களின் ஈடுபாட்டில் இருந்து சிறார்களை நல்வழிப்படுத்தும் வகையில் காவல் சிறுவர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக பழனிசெட்டிபட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காவல் சிறுவர் மன்றம், சிறார் நூலகம் திறப்பு எதிர்காலத்தில் தலைவர்களாக வரக்கூடிய மாணவர்கள் தீய செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து, நூலகங்களை பயன்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து மாணவர்கள் தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார். இந்த நூலகத்தில் அறிவியல், ஆன்மீகம், பொது அறிவியல், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக அல்லிநகரம், கூடலூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வடக்கு உள்ளிட்ட 10 இடங்களில் காவல் சிறுவர் மன்றம், சிறார் நூலகம் திறக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: 'டீக்கடைக்குள் நூலகம்' - அருவி டீக்கடைக்குள் அறிவை வளர்க்கும் புத்தகங்கள்