தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 11:31 AM IST

ETV Bharat / state

பொது நோயாளிகள் வார்டு அருகே கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை?

தேனி: கம்பம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் வார்டு அருகேயே கரோனா தொற்று பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தேனி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது ஆண், மூன்று வயது பெண் குழந்தைகளுக்கு அண்மையில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டு, இரண்டு குழந்தைகளுக்கும் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கரோனா வார்டு அமைக்கப்பட்டு, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக கம்பம் அரசு மருத்துவமனையில்தான் சீமாங் சென்டர் மூலம் அதிகளவில் பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இதன் அருகிலேயே அவசர சிகிச்சைப்பிரிவும் உள்ளதால், தற்போது கரோனா பாதித்த குழந்தைகளை அனுமதித்தது மற்றவர்களை அச்சப்படுத்தியுள்ளது.

மேலும், தொற்றே இல்லாத கம்பம் நகரில் கரோனா பாதித்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் குறைந்து காணப்படுகின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதால், கம்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (23/5/20) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கம்பம் அரசு மருத்துவமணை முன்புறம் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மருத்துவனையில் கரோனா சிகிச்சைக்கு தனியாக மருத்துவர்கள் நியமிக்கவும், அவர்கள் தனியாக குடியிருப்புகளில் வசிக்கவும் தகுந்த ஏற்பாடு செய்யாமல், கம்பம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை அனுமதித்தது வன்மையாக கண்டனத்திற்குரியது.

எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளை தேனி அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்ப நடடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் தெற்கு காவல்துறையினர், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details