கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தென் தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் இந்த அணை தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணைப்பகுதிக்குத் தேவையான மின்சாரம் கேரளாவின் வல்லக்கடவு பகுதியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த 2000ஆம் ஆண்டு மின்கம்பிகள் உரசியதில் யானை உயிரிழந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை கேரள மின்வாரியம் நிறுத்தியது. இதனால் மதகுப்பகுதி, ஆய்வாளர் மாளிகை, அணைப்பகுதி, குடியிருப்பு பகுதிகளில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அணைப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க பெரியாறு புலிகள் சரணாலயம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய அணைப்பகுதிக்காக நிலத்துக்கு அடியில் கேபிள்கள் பதித்து அவசியம் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரியது. இதனை ஏற்ற கேரள உயர்நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்க உத்தரவிட்டது.
முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் மின்சாரம் அதனடிப்படையில் வல்லக்கடவு பகுதியில் இருந்து 5.5 கி.மீ தூரத்திற்கு பூமிக்கு அடியில் மின்சார கம்பிகள் பதிக்கும் பணிகள் 2020 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக கேரள மின்வாரியத்திற்கு ரூ.1.65 கோடியை தமிழ்நாடு அரசு செலுத்தியது. இந்நிலையில் பூமிக்கு அடியில் மின்சார கம்பிகள் பதிக்கும் பணிகள் ஜனவரியில் முடிவடைந்ததை அடுத்து இன்று (பிப்.1) அதற்கான இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் நடைபெற்ற விழாவில், கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி முல்லைப் பெரியாறு அணைக்கான மின் இணைப்பை தொடங்கி வைத்தார். இந்த விழாவில், இடுக்கி மக்களவை உறுப்பினர் டீன் குரியகோஸ், பீர்மேடு சட்டப்பேரவை உறுப்பினர் பிஜூமோள், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தமிழ்நாடு - கேரள பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் பழனிசாமி ட்வீட் இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இதற்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது கோரிக்கையினை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாட்டிற்கு மீண்டும் மின்சாரம் வழங்கிய மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்களுக்கும், மாண்புமிகு கேரள மாநில மின்சாரத்துறை அமைச்சர் திரு.எம்.எம்.மணி அவர்களுக்கும், தமிழ்நாடு பொதுமக்கள் சார்பாக, குறிப்பாக விவசாயப் பெருமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் அணைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.