தேனி: பிரபல தனியார் ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனான முருகன் என்பவர் மீது, அதே கடையில் அழகுசாதனப் பொருட்கள் கடை நடத்தி வந்த தேனி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், 'ஜவுளிக்கடை உரிமையாளரின் மகன் ஆன முருகன் தன்னை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தன்னிடம் உறவு வைத்துக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டு, தற்போது வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தான் கேட்டதற்கு தன்னை கொலை செய்வதாக மிரட்டினார்' எனக்கூறி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், தற்போது முருகன் ஜாமினில் வெளிவந்து உள்ளார். இந்த நிலையில் ஜவுளிக்கடையின் உள்ளே தான் நடத்திவந்த அழகு சாதன அறையில் இருந்த 35 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடையின் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் திருடி விட்டதாகக் கூறி, மீண்டும் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.