தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள புலிக்குத்தி கிராமத்தில் தனியார் பால் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் குமணன்தொழு, கடமலைக்குண்டு, தெய்வேந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடமிருந்து கடந்த 6 மாதங்களாக தினசரி பால் பெற்று வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மூடப்பட்டது. அதன் உரிமையாளரான பாண்டியராஜ் தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிப்படைந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று (நவ. 23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், "கரோனா நோய் பரவலால் எங்களிடம் கொள்முதல் செய்து வந்த பாலை அரசு குறைத்துக்கொண்டதால் தான், தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கி வந்தோம். ஆனால் தற்போது அந்த நிறுவனம் உற்பத்தியாளர்களுக்குத் தர வேண்டிய சுமார் 2 கோடி ரூபாயை தராமல் ஏமாற்றிவிட்டது.
அதன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இது சம்பந்தமாக சின்னமனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆவின் தொழிற்சாலைக்கு எதிராக சாலையில் பாலைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்!