தென் தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடியது முல்லை பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து முல்லை ஆற்றின் குறுக்கே அணையை கட்டி தென் தமிழ்நாட்டிற்கு தேவையான குடிநீர் பற்றாக்கறையை தீர்க்கலாம் என ஆங்கில அரசு முடிவு செய்து, அணை கட்டுவதற்காக ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக்கிடம் பொறுப்பை ஒப்படைத்தது.
பணியை ஏற்றுக்கொண்ட பென்னி குயிக் அணை கட்டுமான பணிகள் மேற்கௌ்ளும்போது, இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதி கட்டப்பட்டிருந்த அணை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக கூடுதல் நிதி தேவைப்பட்டது. இதற்கு ஆங்கிலேய அரசு நிதி ஒதுக்காமல் அணைகட்டும் திட்டத்தை கைவிட்டது. ஆனால், தென் தமிழ்நாட்டு மக்களின் துயரை துடைப்பதில் விடாப்பிடியாக இருந்த பென்னி குயிக், லண்டன் சென்று தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று அணை கட்டும் பணிகளை மீண்டும் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையை கட்டினார்.
முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட பிறகுதான் தென் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தவிர்த்து வேளாண் உற்பத்தி செழிப்படைந்தது. இதன் காரணமாக பென்னி குயிக்கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்ட மக்கள் அவரது பிறந்தநாளான ஜனவரி 15ஆம் தேதியை கொண்டாடி வருகின்றனர். இதில் குறிப்பாக தேனி அருகே உள்ள பாலார்பட்டி கிராமத்தில் ஊர்பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து பாராம்பரிய முறைப்படி வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
முல்லை பெரியாறு பாயும் இந்த பாலார்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பென்னி குயிக்கின் புகைப்படம் இல்லாத வீடுகள் மற்றும் கடைகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தாகம் தீர்த்த தந்தையாக பென்னி குயிக்கை கடவுளுக்கு நிகராக வணங்கி வருகின்றனர். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாராம்பரிய நடனமான தேவராட்டம், சிலம்பாட்டம் ஆடி மகிழ்வித்தனர்.
பென்னி குயிக் பிறந்தநாளை கொண்டாடிய தேனி மக்கள் பென்னி குயிக்கின் புகைப்படத்துடன் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று பென்னிகுயிக் நினைவு கலையரங்கம் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், கிராம மக்கள், விவசாயிகள், மற்றும் சிறுவர்கள் என அனைவரும் பென்னி குயிக்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.