மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதனுடன் இணைக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கடன் உதவி வழங்கும் விழா தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை மூலம் கடன் பெறுபவர்கள் நல்ல முறையில் தொழிலை நடத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் எனக் கூறினார். பின்னர் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 597 நபர்கள் பயன்பெறும் வகையில் 20 கோடியே 52 லட்சத்து 76 ஆயிரத்து 635 ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்கினார்.