மதுரை-தேனி மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2010 ஆம் ஆண்டே இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்த கதியில், அகல ரயில் பாதைப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ரூ.445.46 கோடி செலவில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் இன்று மாலை பல்வேறு திட்டப்பணிகளோடு மதுரை-தேனி ரயில் பயணத்தையும் தொடங்கி வைத்தார். இதற்கான விழா மதுரை சந்திப்பிலுள்ள 6-ஆவது நடைமேடையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக கூட்டுறவுத்துறை முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன் ஆகியோர் கொடியசைத்து ரயிலைத் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்ட ரயில்வே உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 6.45 மணியளவில் பயணத்தைத் தொடங்கிய மதுரை-தேனி ரயிலில் செல்வராஜ் லோகோ பைலட்டாகவும், குபேந்திரன் உதவி லோகோ பைலட்டாகவும் பணியாற்றினர். உதவி லோகோ பைலட் குபேந்திரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவன். தற்போது என்னுடைய சொந்த ஊருக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ரயிலில் நான் ஓட்டுநராகப் பணியாற்றுவது பெருமையாக உள்ளது.