தமிழ்நாடு கள் இயக்க மாநிலத் தலைவர் நல்லசாமி நேற்று (பிப். 19) தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இந்த உரிமை 33 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது.
இதை ஈர்க்கும்விதமாக மார்ச் 13ஆம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடைபெறும். நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்து ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்விதமாக இந்த மாநாடு அமையும்.
இதற்கு முன்னோட்டமாக வருகிற 27ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் பொன்னம்பலத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். நாங்கள் அரசிடம் கள் இறக்குவதற்கு அனுமதி கேட்கவில்லை.
கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உரிமைதான் கள் இறக்குவதும், பருகுவதும். உலக அளவில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன.
தமிழ்நாட்டைத் தவிர எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிகாரில் நித்தீஸ்குமார் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது.