கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கூட்டாறு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(62). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இந்துராணி என்ற மனைவியும், அம்பிளிராஜ், ஆதிரா என்ற பிள்ளைகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் அம்பிளிராஜிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து கரோனா நோய் பரவலால் விடுதி அடைக்கப்பட்டு வருமானமின்றி இருந்ததால், வங்கிக் கடன் செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.
அவரது மகள் ஆதிராவிற்கு தற்போது வயது 25 ஆவதால், அவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால், திருமணம் செய்து வைப்பதற்கான பணம் இல்லாத காரணத்தினால், ராஜசேகரன் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜசேகரன், தமிழக - கேரள எல்லைப் பகுதியான இராமக்கல் மெட்டு பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது மகள் ஆதிராவுக்கு போன் செய்து, தான் மன உளைச்சலில் உள்ளதாகவும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்து இணைப்பை துண்டித்துள்ளார்.