தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கோம்பை, தேவாரம் உள்ளிட்ட மானவாரி பகுதிகளின் பாசன நீர் தேவைக்காக 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 18ஆம் கால்வாய். இதற்காக முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர் கேம்ப்பில் இருந்து கூடலூர், கம்பம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி வழியாக தேவாரம் ரெங்கநாதபுரத்தில் உள்ள சுத்தகங்கை ஓடை வரையிலான சுமார் 40 கி.மீ தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இதன் மூலம் 13 கிராமங்களில் உள்ள 44 கண்மாய்கள், நான்காயிரத்து 614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைந்தன.
இதனைத்தொடர்ந்து போடி தாலுகாவில் உள்ள ராசிங்காபுரம், மேலச்சொக்கநாதபுரம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பொட்டிப்புரம், சிலமலை வழியாக 14 கி.மீ தூரத்திற்கு கூவலிங்க ஆறு வரை 18ஆம் கால்வாய் நீட்டிக்கப்பட்டது. இதனால் போடி, உத்தமபாளையம் ஆகிய தாலுகாகளில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த ஏழு கண்மாய்கள் மூலம் நான்காயிரத்து, 794 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைந்தன.