தேனி: வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் புகழ்பெற்ற ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் சித்திரைத் திருவிழா வருகிற மே 9ஆம் தேதி துவங்கி மே 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று கோயிலில் கொடியேற்றம் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தொடக்க நிகழ்வாக இன்று கண்ணீஸ்வரமுடையார் கோயில் முல்லைப்பெரியாற்றில் இருந்து கோயிலுக்கு முக்கொம்பு வடிவிலான கம்பம் கொண்டு வரப்பட்டு, கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் காப்புக் கட்டிக்கொண்டனர். கொடியேற்றம் துவங்கி 22ஆவது நாளில் இருந்து எட்டு நாட்கள் திருவிழா நடைபெறும். கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கொடிக் கம்பம் நடப்படும் அத்தி மரத்திலான முக்கொம்புக்கு, மண் கலயத்தில் முல்லை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுவது முக்கிய ஐதீகமாகும்.