தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 5, 2020, 5:55 PM IST

ETV Bharat / state

கைது நடவடிக்கைக்கு பயந்து மத்திய அரசின் சட்டங்களை அதிமுக ஆதரித்தது - தங்க தமிழ்செல்வன்

தேனி: மத்திய அரசின் கைது நடவடிக்கைக்கு பயந்து புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக அரசு வாக்களித்துள்ளதென திமுக தேனி (வடக்கு) மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

AIADMK backed centrals farm laws for fear of arrest
திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லியை அடுத்த புராரி பகுதியில் கடந்த பத்து நாள்களாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளை எதிர்கட்சியான திமுக வன்மையாகக் கண்டித்துள்ளது. அத்துடன், தமிழ்நாடு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் இன்று (டிச.5) திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் தேனி பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம், நேரு சிலை சந்திப்பு, மதுரை சாலை ஆகிய பகுதிகளைக் கடந்து பங்களாமேடு பகுதியை பேரணி அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தங்க தமிழ்செல்வன், “ புதிய வேளாண் சட்ட மசோதக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றிய போது அதனை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் எதிர்த்தார். சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததோடு மட்டுமல்லாது நாடாளுமன்றத்தில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசின் கைது நடவடிக்கைக்கு பயந்து போய் தான் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக அரசு வாக்களித்துள்ளது. இல்லையென்றால் இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள்.

அதே பயத்துடன் தான் அரசு விழாவில் மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேசாமல், பாஜகவுடனான கூட்டணி குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அமித்ஷாவிற்கு பயந்து கொண்டு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றார்.

கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு இதற்கு முன் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக, இனி வரும் காலங்களில் வெற்றி பெறப்போவதில்லை. மேலும், யார் புதிதாக கட்சி தொடங்கினாலும் திமுகவிற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக அமருவார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக அரசின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், சட்டங்களுக்கு ஆதரவளித்த மாநில அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க :விவசாயிகள் மீதான காவல் துறையினரின் அடக்குமுறைகளைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பட்டம்!

ABOUT THE AUTHOR

...view details