தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவி செய்வது போல் நடித்து ரூ. 49,500 மோசடி: இளம்பெண் கைது! - பட்டதாரி இளம்பெண் மோசடி

தேனி: ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வந்த ஜவுளிக்கடை மேலாளரிடம் உதவி செய்வது போல் நடித்து ரூ. 49 ஆயிரத்து 500 மோசடி செய்த இளம் பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி செய்த பட்டதாரி இளம்பெண்
மோசடி செய்த பட்டதாரி இளம்பெண்

By

Published : Feb 3, 2021, 8:40 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி குன்னூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ்(45). தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீரமணா ஜவுளிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த ஜனவரி 25ஆம் தேதி, வழக்கம் போல கடையின் விற்பனை பணத்தை வங்கியில் போடுவதற்கு தேனி பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், வெளியே இருந்த ஏ.டி.எம் பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்தச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த இளம்பெண் ஒருவர், நாகராஜிடம் தான் பணம் செலுத்துவதற்கு தான் உதவி செய்வதாக கூறி ரசீது வராத இயந்திரத்தில் ரூ. 50 ஆயிரம் பணத்தை போட்டுள்ளார். அதில், ஒரு ஐநூறு ரூபாய் தாளை மட்டும் இயந்திரம் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், மீதம் ரூ.49,500 கணக்கில் செலுத்தப்பட்டதாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.500ஐ பெற்றுக் கொண்ட நாகராஜ்,ஜவுளிக்கடை நிறுவனத்தின் வங்கி கணக்கை சரி பார்க்கையில் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் செலுத்தப்பட்ட பணம் வரவு ஆகாமல் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, வங்கியைத் தொடர்புகொண்டு விசாரிக்கையில், சம்பவத்தன்று ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலாக பணம் ஏதும் பெறப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மேலாளர் நாகராஜ், தேனி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது.

இதில் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், உதவி செய்வதாகக் கூறிய இளம்பெண், நாகராஜ் கொடுத்த பணத்தை இயந்திரத்தில் செலுத்துவது போல நடித்து, அவர் சென்றதும் பணத்தை திரும்ப எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதனடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மனைவி மணிமேகலை (23) என்பவர் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவரிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணம் ரூ 49,500 கைப்பற்றப்பட்டது.

கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியே வசித்து வரும் மணிமேகலை, இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி ஆவார். இதேபோன்று விருதுநகர் மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்த வருபவர்களுக்கு உதவுவது போல நடித்து மணிமேகலை மோசடி செய்து தெரியவந்தது.

மேலும் போடி பகுதியில் இருந்தும் சிலர் இது போன்று தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக தேனி காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக தேனி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிமேகலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதையும் படிங்க: சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் மோசடி : நடவடிக்கை எடுக்க கோரி புகார்

ABOUT THE AUTHOR

...view details