நீலகிரி:குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்து நடந்தது. இதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
விபத்தின்போது மீட்புப் பணிக்கு உதவிய நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த 13ஆம் தேதி வருகைதந்த தென்பிராந்திய தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அருண் கிராம மக்களுக்கு மருத்துவ முகாம் ஓராண்டிற்கு நடத்த அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று ராணுவப் பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ராஜேஸ்வர் சிங், ராணுவ மருத்துவமனை தலைவர் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது. கிராம மக்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.