உதகை அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பாகத்திற்கு உட்பட்ட இந்த வனப்பகுதியில் புலிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று (நவ.20) மாலை சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆச்சக்கரை வனப்பகுதியில் எட்டு வயது மதிக்கதக்க பெண் புலி ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறை ஊழியர்கள் பார்த்தனர். உடனடியாக அது குறித்த தகவலை முதுமலை புலிகள் காப்பக உயர் அலுவலர்களுக்குத் தெரிவித்தனர்.
புலிகுட்டிகளை மீட்ட வனத்துறையினர் இரவு நேரம் என்பதால் உடனே இறந்த புலிக்கு உடற்கூராய்வு செய்ய முடியவில்லை என்றும், இன்று (நவ.21) காலை சம்பவ இடத்தின் அருகில் புலி குட்டிகள் சத்தமிடுவதை அறிந்து, அங்கு சென்று வனத்துறை ஊழியர்கள் சோதனையிட்ட போது அருகில் இருந்த முட்புதருக்குள் 2 ஆண் புலிகள் இருப்பதைக் கண்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
அவற்றை மீட்ட வனத்துறையினர், தற்போது கால்நடை மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தப் புலி குட்டிகள் பிறந்து சுமார் 20 நாட்கள் இருக்கும் என்று கூறிய புலிகள் காப்பக கள இயக்குநர் கௌசல், புலி குட்டிகளை தேசிய புலிகள் ஆணைய நெறிமுறைபடி உயிரியல் பூங்காவிற்க்கு வழங்குவதா அல்லது முதுமலையில் வைத்து தொடர்ந்து பராமரிக்கபப்படுவதா என ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே இறந்த தாய் புலிக்கு உடற்கூராய்வு செய்து இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய வனத்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.