தமிழ்நாடு

tamil nadu

தப்பியோடிய டி23 புலி எருமையைத் தாக்கியதால் பரபரப்பு

By

Published : Oct 15, 2021, 1:29 PM IST

கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தியும் தப்பியோடிய டி23 புலி, இன்று காலை வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு எருமையைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தப்பியோடிய T23 புலி
தப்பியோடிய T23 புலி

நீலகிரி:கூடலூர், மசினக்குடி பகுதிகளில் நான்கு மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக்கொன்ற டி23 புலியைப் பிடிக்க வனத் துறையினர் கடுமையாகப் போராடிவருகின்றனர். 20 நாள்களுக்கும் மேலாகப் புலியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று (அக். 14) இரவு 9 மணி அளவில் டி23 புலிக்கு மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். ஆனால் புலி வனத் துறையினரிடம் சிக்காமல் மயக்க நிலையில் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. இரவு வரை தேடும் பணி நடத்தப்பட்டும் புலி பிடிபடவில்லை.

இதையடுத்து இன்று (அக்.15) காலை மசினக்குடி சோதனைச்சாவடி அருகே சாலையைக் கடந்துசென்று வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு எருமையை புலி தாக்கியுள்ளது. இதையறிந்த வனத் துறையினர் விரைந்து அப்பகுதிக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தப்பியோடிய டி23 புலி - வளர்ப்பு எருமையைத் தாக்கியதால் பரபரப்பு

மசினக்குடி சுற்றுவட்டார மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அப்பகுதியில் வனத் துறையினர் குழுக்களாகப் பிரிந்து கும்கி யானைகள் உதவியுடன் புலி இருக்குமிடத்தைத் தேடிவருகின்றனர். நேற்று ஒரே நாளில் போஸ்பரா பகுதியிலிருந்து பத்து கிலோமீட்டர் கடந்து மசினகுடி பகுதிக்கு டி23 புலி இடம்பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'எம்ஜிஆர் மாளிகை'யாக மாறும் அதிமுக தலைமைக்கழகம்!

ABOUT THE AUTHOR

...view details