நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.
அப்போது கண்காட்சிகள், சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெறுவது வழக்கம். இதனால் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் உதகைக்கு அதிக அளவில் வந்து செல்வர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், மலர் மாடம், அலங்கார வேலிகள் போன்ற இடங்களில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, கேரட், பாகற்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி, மற்றும் பழ வடிவங்களில் இருக்கைகள் அமைக்கும் பணி முடிந்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதே போன்று பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் புதிதாக கியூஆர் (QR code) கோடு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.