2020ஆம் ஆண்டுக்கான புலனாய்வில் சிறப்பாக பணியாற்றியதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் ஏ.பொன்னம்மாளும் ஒருவர்.
சிறுமிகள் மீதான வன்முறை, பெண்களுக்கு எதிரான வழக்குகள் ஆகியவற்றை பொன்னம்மாள் திறம்பட விசாரணை மேற்கொண்டதன் பலனாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் முதன்மை காவல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து, 2016ஆம் ஆண்டில் காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது, நீலகிரி மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த விருது கிடைத்ததன் பின்னணி குறித்து பொன்னம்மாள் கூறுகையில், 'காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது எனது மிக முக்கியமான பழக்கம். அதிலும், குழந்தை திருமணத்தைத் தடுப்பது, பாலியல் ரீதியான வழக்குகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பது என அதிக கவனம் செலுத்தி வந்தேன். விவசாய பின்னணியிலிருந்து வந்ததாலேயே எளிய மக்களின் பிரச்னைகளை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது' என்றார்.