தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகம் பாதுகாப்பாக இருப்பதால் வடமாநில குழந்தைகள் இங்கு படிக்கின்றனர்" - அமைச்சர் எ.வ.வேலு

ஊட்டி மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழகம் பாதுகாப்புடன் இருப்பதால்தான் நீலகிரியில் உள்ள அங்கன்வாடியில் வட மாநிலங்களை சேர்ந்தவர்களின் 1,250 குழந்தைகள் படிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

Minister E V Velu said Tamil Nadu is safe so North people children studying here
தமிழகம் பாதுகாப்பாக இருப்பதால் தான் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் இங்கு படிக்கின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்

By

Published : Mar 7, 2023, 8:10 AM IST

தமிழகம் பாதுகாப்பாக இருப்பதால் தான் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் இங்கு படிக்கின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்

நீலகிரி:தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது. வடமாநில தொழிலாளர்கள் மத்தியிலும், பீகார் மாநிலத்திலும் இந்த வதந்தியால் பதற்றமான சுழல் உருவானது. வதந்தி பரப்பியவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்தனர். மேலும் அமைச்சர்களும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் நிறுவனங்களில் ஆய்வு செய்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்தனர்.

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (மார்ச்.6) இரவு ஊட்டி சென்றார். பின்னர் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.

முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழக அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி, இங்கு திறக்கப்பட்டு 2 ஆண்டுகளாக மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மருத்துவக் கல்லூரிக்காக தொடர்ச்சியாக கட்டடங்கள் கட்டுவதற்காக ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 185 பேர் உள்பட 950 வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வாரத்திற்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. 2 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. உதகையின் காலநிலையை கருத்தில் கொண்டு தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டர் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனாலும் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில், வட மாநிலத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக விஷமத்தனமான பிரசாரம் செய்யப்பட்டது. இதனை அறிந்த முதலமைச்சர் இரண்டு தினங்களுக்கு முன்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். வடமாநிலத்தில் இருந்து வருகின்ற அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள்.

அவர்கள் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். கரோனா காலத்தின் போது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக அளவு வட மாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இங்கு பணிபுரிவதாலும், பாதுகாப்பு உணர்வுடன் இருப்பதாலும் தான் அவர்களுடைய குழந்தைகள் 1,250 பேர் நீலகிரியில் அங்கன்வாடியில் படித்து வருகின்றனர்.

அவர்கள் இங்கு பாதுகாப்புடன் ஒற்றுமையுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்" என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, ஆ.ராசா இருவரும் வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு பரிமாறினர். மேலும் அவர்களின் குறைகளும் கேட்டறிந்தனர்.

இதில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, பொதுப்பணித்துறை தலைமைச் பொறியாளர் இளஞ்செழியன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகரி உள்பட பலர் இருந்தனர்.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி நீர் தொட்டிக்குள் வைத்த கொடூர கணவன் கைது!

ABOUT THE AUTHOR

...view details