தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - வழக்கு ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதால் அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்ட நிலையில், விசாரணையை ஜூன் 23ம் தேதிக்கு உதகை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Kodanadu case
கோடநாடு வழக்கு

By

Published : Apr 28, 2023, 6:50 PM IST

உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி நாராயணன் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 28) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்ஷீர் அலி ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசாரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகான், "கூடுதல் சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. எனவே, அதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும்" என வாதாடினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாராயணன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், "கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் மூலம் நேர்மையாகப் பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக பாரபட்சம் இன்றி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு ஆவணங்களை ஒன்று திரட்டி அதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் செல்போன் உரையாடல்கள் தொலை தொடர்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஆத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சயான் தனது காரில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த போது, கேரள மாநிலம் கண்ணாடி என்ற பகுதியில் விபத்து ஏற்பட்டது. இதில் சயான் காயம் அடைந்த நிலையில் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'செந்தலைப்பட்டியில் மஞ்சு விரட்டு நடத்தலாம்': உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details