ஆனைமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானைகள் முகாம் உள்ளது. இது 1920ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது. 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த முகாமில் மொத்தம் 27 யானைகள் உள்ளன. அனைத்து யானைகளுக்கும் காலை, மாலை வேளைகளில் வயதிற்கேற்ப உணவு வழங்கப்படுகிறது.
இதில் சிவகாமி, சாரதா ஆகிய இரு யானைகளுக்கு ஒரு கண்ணில் முழுமையாக, மறு கண்ணில் பாதியளவும் பார்வைத்திறன் பறிபோய்விட்டன. மேலும் நான்கு யானைகள் பார்வைக்குறைபாட்டால் அவதிப்படுகின்றன. பார்வைக்குறைபாடு உள்ள யானைகள் வனத்திற்குள் செல்லும்போது தங்களுக்கான உணவைத் தேடி உண்பதில் சிரமப்படுகின்றன.
தற்போது வரை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கென காலியாக உள்ள பிரத்யேக கால்நடை மருத்துவர் பணியிடம் நிரப்பப்படவில்லை. வனத்துறையினரும் அவ்வப்போது அரசு கால்நடை மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களை அழைத்துவந்து யானைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.