தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"யானைகளை பாதுகாப்பது நமது தேசிய பொறுப்பாகும்" - நீலகிரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு! - பொம்மன் மற்றும் பெல்லியை சந்தித்த குடியரசு தலைவர்

"நமது தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக யானைகளை பாதுகாப்பது நமது தேசிய பொறுப்பாகும். பெட்டகுரும்பர், காட்டுநாயக்கர் மற்றும் மலசார் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவும் அனுபவமும் இந்த முகாமை நிர்வகிப்பதில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்" என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 5, 2023, 7:47 PM IST

நீலகிரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நீலகிரி:தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆக.05) மாலை வருகை தந்தார். மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிங்காரா (நீலகிரி மாவட்டம்) ஹெலிபேட் மைதானத்தை வந்தடைந்தார். குடியரசுத் தலைவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 4 மணியளவில் தெப்பக்காடு யானைகள் முகாமை சென்றடைந்தார்.

தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை பார்வையிட்ட குடியரசுத் தலைவர், யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார். அதன் பிறகு, ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் நாயகர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை சந்தித்து உரையாடினார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு யானைகள் முகாம்களில் பணிபுரியும் யானை பாதுகாவலர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யானைப் பராமரிப்பாளர்கள் தமது பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விளக்கமளித்தனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், அவர்களுடன் நின்று குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "ஆசியாவின் மிகப் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றான முதுமலைக்கு வந்து இன்று உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மாதம் ஆஸ்கார் விருது பெற்ற 'The Elephant Whisperes' என்ற ஆவணப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆதரவற்ற குட்டி யானைகளை தங்கள் குழந்தைகளைப் போல் பராமரித்து வரும் பொம்மன், பெல்லி தம்பதியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

இந்த ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் யானை பராமரிப்பு மேலாண்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றது. அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் இது. நான் உங்கள் அனைவரையும் சந்தித்து வனவிலங்கு பாதுகாப்புக்கு நீங்கள் ஆற்றி வரும் பெரும் பங்களிப்பைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

நமது தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக யானைகளை பாதுகாப்பது நமது தேசிய பொறுப்பாகும். பெட்டகுரும்பர், காட்டுநாயக்கர் மற்றும் மலசார் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவும் அனுபவமும் இந்த முகாமை நிர்வகிப்பதில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பழங்குடியினர் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றனர்.

தமிழில் யானைபாகன் என்று அழைக்கப்படும் இந்த மாவுத்களின் சேவையை அரசு அங்கீகரித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் அவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த சமூகங்களுக்கு அவர்களின் அரசியலமைப்பு உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக எனக்கு கூறப்பட்டது. அப்போது அது உலகத்தரம் வாய்ந்த மையமாகவும், ஆசிய யானைகள் பாதுகாப்பில் முன்னோடியாகவும் மாறும்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் பெறும் ஆதரவு மதிப்புமிக்கது. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அடுத்த தலைமுறைக்கு கல்வி கற்பதை விட சிறந்தது எதுவுமில்லை. உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் அனுபவங்களைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் என்றென்றும் போற்றும் அழகான நினைவுகளுடன் செல்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிரகாசமான மற்றும் அழகான எதிர்காலம் அமைய நான் விரும்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:அதிமுகவில் சேர 2 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் - ஈபிஎஸ் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details