தஞ்சாவூர்:வெண்ணாற்றங்கரையில் உள்ள நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் பெருமாள் தனித்தனி கோயில்களில் அருள்பாலிக்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் 3 கோயில்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்ததால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது.
இவை தஞ்சையின் மாமணிக்கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும் நீலமேகப் பெருமாள் கோயிலில் மூலவரான நீலமேகப் பெருமாள், அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவி செங்கமலவல்லி தாயார், இந்த பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றி வழிபாடு நடக்கிறது.
இக்கோயிலில் உற்சவர்களுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தஞ்சையில் நடைபெறும் 24 கருடசேவையின் போது நீலமேகப் பெருமாள் ஆண்டாளுடன் கருடசேவையில் முதலாவதாக வருவது தனி சிறப்பாகும். இக்கோயிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதி, நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மகாலட்சுமி இக்கோயிலில் பிரகாரத்தில் நரசிம்மரின் வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.
இந்த நரசிம்மர் வலவந்தை நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். அசுரனை அழித்த நரசிம்மர் கோபம் தணியாமல் இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை என்பதால் மகாலட்சுமி நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்து கொண்டாள் என்பதே இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். அதிகமாக கோபப்படுபவர்கள் இத்தல இறைவனை வணங்கி மன அமைதி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.