தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2023, 3:17 PM IST

ETV Bharat / state

பத்திரிகையாளர்களை வெளியேறச் சொன்ன தஞ்சை மேயர்.. காரணம் என்ன?

தஞ்சாவூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதற்கு திமுக, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்களை வெளியேறச் சொன்ன தஞ்சை மேயர்.. காரணம் என்ன?
பத்திரிகையாளர்களை வெளியேறச் சொன்ன தஞ்சை மேயர்.. காரணம் என்ன?

தஞ்சாவூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதற்கு திமுக, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்டு, பின்னர் அவை உரங்களாக மாற்றப்பட்டு, தனியார் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணியினை மேம்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாக இயக்குநரின் உத்தரவுப்படி, வெளிக்கொணர்வு (out sourcing) தூய்மைப் பணியாளர் மூலம் பணி மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திடக்கழிவு மேலாண்மைப் பணி மேற்கொள்வதற்கு ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியிட்டு, குறைந்த ஒப்பந்தப் புள்ளி வழங்கிய தனியார் நிறுவனத்திற்கு பணியினை மேற்கொள்ள கடந்த ஏப்ரலில் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2023 - 2024ஆம் ஆண்டிற்கு 12 கோடியே 14 லட்சத்து 39 ஆயிரத்து 150 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் வெளிக்கொணர்வு முகமை மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் குப்பைகளை சேகரிக்கவும், மேலும் குப்பைகளை எம்சிசி நிலையத்திற்குக் கொண்டு செல்லும் பணிக்கு அலுவலக வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதற்கானப் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவு,

தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்குதல், பணியாளர்களுக்கு இபிஎப், இஎஸ்ஐ, சீருடை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில் தனியார் நிறுவனம் டன் ஒன்றுக்கு குறைந்த அளவு ஒப்பந்தத் தொகையாக 3 ஆயிரத்து 430 ரூபாயை அளித்திருந்தது. இந்தப் பணி கடந்த மே முதல் மாநகராட்சி பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு, தினமும் சேகரிக்கும் குப்பைகளை compost yard கொண்டு செல்லப்பட்டு, எடை போட்டு, பின் எம்சிசி சென்டர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வெளிக்கொணர்வு முகமை மூலம் 350 ஒப்பந்த தூய்மைப் பணியாளர் நியமிக்கப்பட்டு, தனியார் நிறுவனம் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வெளிக்கொணர்வு முகமை பணிகளின் செயல்பாடு குறித்த விளக்க கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்களை அழைத்திருந்த நிலையில், செய்தியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த மாநகராட்சி மேயர் ராமநாதன், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக புகைப்படம் எடுத்துவிட்டு அனைவரும் வெளியில் சென்று விடுங்கள் என்றும், இது சாதாரண கூட்டம்தான் என்றும் கூறி உள்ளார். இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தியுடன் வெளியேறினர்.

பின்னர் கூட்டத்தில் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைத்ததற்கு திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, தங்களது வார்டு குறைகளையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டலத் தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யா, கலையரசன் மற்றும் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி உள்ளிட்ட திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details