தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சித்த மருந்துகள் நல்ல பயனளிப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் கரோனா தடுப்பிற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரி, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, தற்போது கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கல்லூரியில் 'சித்தா கோவுட் சென்டர்' (கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்) தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று உள்ளவர்கள் சித்தா மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பினால் அங்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 50 படுக்கைகளுடன் இந்த மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.