தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'2024-ல் அகில இந்திய அளவில் பாஜகவிற்கான முடிவுரை எழுதப்படும்' - நாஞ்சில் சம்பத்

மாநகர திமுக சார்பில் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறாது எனவும்; கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே இதற்கான உரைகல் எனவும் விமர்சித்துள்ளார்.

By

Published : Jul 9, 2023, 7:00 PM IST

“2024-ல் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி பாஜகவிற்கான முடிவுரையை எழுதும்” - நாஞ்சில் சம்பத்
“2024-ல் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி பாஜகவிற்கான முடிவுரையை எழுதும்” - நாஞ்சில் சம்பத்

'2024-ல் அகில இந்திய அளவில் பாஜகவிற்கான முடிவுரை எழுதப்படும்' - நாஞ்சில் சம்பத்

கும்பகோணம்: அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி, பாஜகவிற்கான முடிவுரையை எழுதும். அதற்கு முகமாக மு.க.ஸ்டாலின் இந்திய அரசியல் வரலாற்றில் விஸ்வரூபம் எடுத்துள்ளார் என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

கும்பகோணம் கும்பேஸ்வரன் மேல வீதியில் மாநகர திமுக சார்பில் நேற்று இரவு கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழா 3வது வட்டக் கழக அவைத்தலைவர் பி.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த அனைவரையும் மாநகரச் செயலாளர் சு.ப.தமிழழகன் வரவேற்றார். இக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய நாஞ்சில் சம்பத்,"தமிழக அரசியல் வரலாற்றில் 75 ஆண்டு காலம் தலைப்புச் செய்தியாக இருந்தவர் கலைஞர், 50 ஆண்டுகாலம் கழகத் தலைவராக இருந்தவர், இந்திய அரசியல் வரலாற்றிலேயே எந்த தலைவரும் செய்யாத சாதனையாக, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் 13 முறை வெற்றி கண்டவர் கலைஞர்’’ என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசுகையில், “அமைச்சர் கைது, திமுக சிக்கிக் கொண்டது என சிலர் கைகொட்டி சிரிக்கிறார்கள். தாண்டி குதிக்கிறார்கள். தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள், இதை காட்டிலும் ஒரு நெருக்கடியை 1975ஆம் ஆண்டிலேயே திமுக சந்தித்தது. பக்தியின் பெயரால், கோயிலின் பெயரால், கடவுள்களின் பெயரால் திமுகவிடம் மல்லுக்கட்ட பார்க்கிறார்கள், திமுகவில் 98 சதவீதம் பேர் பக்தர்கள் தான், இவர்கள்தான் திமுகவையும் பக்தியையும் காப்பாற்றுகிறார்கள். நாத்திகம் பேச வேண்டிய தேவையில்லை. அந்த கொள்கையை உறுதியாகக் கொண்டவர்கள் இருந்துவிட்டு போகட்டும்.

திமுகவுக்கு பலமாக உள்ள செந்தில் பாலாஜி பெயரை சின்னாபின்னப்படுத்தவே இத்தகைய நெருக்கடி:

செந்தில் பாலாஜி மீதான வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் அதனை இரண்டு மாதத்தில் விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அமலாக்கத்துறையோ 17 மணி நேரம் அமைச்சருக்கு விசாரணை என்ற பெயரில் நெருக்கடி தந்து, அவரை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி மயக்கமும் மாரடைப்பும் வர காரணமாக இருந்துள்ளனர்.

இத்தகைய நெருக்கடி தந்ததற்கு காரணம் இவர் திமுகவுக்கு பலமாக உள்ளார். இவரது பெயரை சின்னாபின்னப்படுத்த வேண்டும் என்பது தான். பொள்ளாச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரே நேரத்தில் தேமுதிக, பாமக, அதிமுக என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 94 ஆயிரம் நபர்கள் திமுகவில் இணைய காரணமாக இருந்தவர். அதேபோல மின்துறை அமைச்சராக இருந்து, இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர்.

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற காரணமாக இருந்து உயிரோடு இருந்த பாஜகவை பட்டப்பகலில் அடக்கம் செய்தவர் செந்தில் பாலாஜி”, என பெருமையோடு குறிப்பிட்டார்.

இந்தியாவின் மிகப்பெரிய வாஷிங் மெஷின் பாஜக: ''ஏழாயிரம் கோடி ஊழல் செய்த அஜித் பவார் பாஜகவில் இணைந்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய வாஷிங் மெஷின் பிஜேபி. எந்த அளவுக்கு துணியைப் போட்டாலும் சலவை செய்து தந்துவிடும். எல்லா அழுக்கு பயல்களும் அதில் போய் சேர்கிறான். நூற்றுக்கணக்கான ரவுடிகள் பிஜேபியில் உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான நிதி முறைகேடுகளில் பாஜக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையை ஏவி திமுகவை அழுக்காக்க முடியுமா! திமுக ஆகாயம்.. அதனை அண்டங் காக்காய்கள் அழுக்காக முடியாது. அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் இந்திய பிரதமரால் மணிப்பூரில் துயற்றிற்கும் மக்களை நேரில் சந்திக்க முடியவில்லை”, என்றும் அகில உலக ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக ஆளுநர் ரவி, நாகாலாந்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டவர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை கையெழுத்திட மறுக்கிறார் என்றும் விமர்சித்தார்.

ஆளுநர் ஒரு போஸ்ட் மாஸ்டர் மாதிரி: ''முதலமைச்சரின் உத்தரவுகளை திட்டமிட்டு புறக்கணிக்கிறார். பல்கலைக்கழகங்களை தனது பக்கத்தில் வைத்துக் கொண்டு கட்டியாள நினைக்கிறார். ஆளுநர் ஒரு போஸ்ட் மாஸ்டர் மாதிரி அதை விடுத்து அவர், ஆட்சி மீது அறிவிக்கப்படாத போரை தொடங்கியுள்ளார். திமுகவை அவர் அழுக்காக்கவும் அவமானப்படுத்தவும் முயல்கிறார்.

கோளாறு பதிகம் படிக்க குரு மகா சந்நிதனங்களை பிரதமர் தனி விமானத்தில் அழைத்துள்ளார். அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் யாருக்கும் கோளாறு பதிகம் பாடத்தெரியாது என்றும்; என்னை அழைத்திருந்தால் அதனை நானே அங்கு வந்து பாடி இருப்பேன்'' என்றும் கூறினார்.

கூட்டணிக்கு முகமாக உள்ள மு.க.ஸ்டாலின் இந்திய அரசியல் வரலாற்றில் விஸ்வரூபம் எடுப்பார்:2024 நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக வெற்றி பெறாது, வாய்ப்பு இல்லை, கர்நாடக சட்டமன்றத் தேர்தல்தான் இதற்கான உரைகல், மீறி பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவில் அதன் பிறகு தேர்தலே நடைபெறாது என அதிர்ச்சியூட்டியதுடன் பாஜகவுக்கு முடிவுரை எழுத அதனை எதிர்க்கும் 16 கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணிக்கு முகமாக உள்ள மு.க.ஸ்டாலின் இந்திய அரசியல் வரலாற்றில் விஸ்வரூபம் எடுப்பார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த முன்னோடிகளான பி.சாமிநாதன் மற்றும் அழகிரிசாமி, மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எச்சமிட்ட காகம் மீது இரக்கம் காட்டிய எடப்பாடி பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details