தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடுகிறது. அங்கு பூண்டி வெங்கடேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு வாக்குச் சேகரிக்க பூதலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "புராதன சிறப்புமிக்க தஞ்சை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எனத் தொடங்கி இன்று பிரகதீஸ்வரர் கோயில் வரை பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. சுவாமிமலை முருகன் திருவிழா பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு மக்கள் வெகுவாகக் காத்திருக்கின்றனர்.
தமிழ் மொழி பழமையான மொழி; மூத்த மொழி; அதனுடைய இலக்கியம் உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. இந்தியாவின் ஆன்மிகத்திற்கு தமிழர்கள் கொடுத்த வரம் அதிகம். திமுக-காங்கிரஸ் போல வழிவழியாக உள்ள வாரிசு குடும்ப அரசியலை ஒழித்து, மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும்.
2ஜி, 3ஜி, 4ஜி என்பது திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஊழல்கள். DMK-வில் உள்ள D என்றால் Dynasty (குடும்ப ஆட்சி), M என்றால் Money (பணம்), K என்றால் Katta Panchayat (கட்டப்பஞ்சாயத்து), ஒரு குடும்பம் பணம் பறிக்க கட்டப்பஞ்சாயத்து நடத்துவதே DMK என்று பொருள்.
காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை தாரைவார்த்ததினால் 238 பேர் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போது இலங்கைத் தமிழர்கள் ஒருவர்கூட நமது ஆட்சியில் பாதிக்கப்படாத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளோம்.
தமிழ்நாட்டிற்கு இந்தாண்டு இரண்டு லட்சம் கோடி உதவி செய்துள்ளோம். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகவும், ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் உள்ளனர்.