ஒடிசா ரயில் விபத்தில் பலரது உயிரை காப்பாற்றிய தஞ்சாவூர் வெங்கடேஷ் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம் இளங்கார்குடியை சேர்ந்தவர் ராணுவ வீரர் வெங்கடேஷ். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர், தற்சமயம் மேற்கு வங்காளத்தில், தேசிய பேரிடர் மீட்புப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, விடுமுறைக்கு ஊருக்கு வருவதற்காக, கடந்த ஜூன் 2ஆம் தேதி கோரமண்டல் விரைவு ரயிலில் ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்குச் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், இரவு 7 மணி அளவில் இந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு, சரக்கு ரயிலில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
மேலும், சில பெட்டிகள் அருகிலிருந்த மற்றொரு தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்ததில், அந்த தடத்தில் வந்த ஹவுரா அதிவிரைவு ரயிலும் மோதி கோர விபத்தாக உருவெடுத்தது. இந்த விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த ரயிலில் பயணித்த இந்திய ராணுவத்தின் தேசிய பேரிடர் மீட்புப் பிரிவைச் சேர்ந்த வெங்கடேஷ், உடனடியாக, தனது உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, நடந்த ரயில் விபத்து குறித்து தகவல் அளித்துள்ளார். அத்துடன் அவர் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்றுள்ளதால், விபத்து நடந்ததிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை பலரையும் மீட்டு, உயிர் பிழைக்கக் காரணமாக இருந்துள்ளார்.
இந்த கோரமண்டல் ரயில் விபத்தையடுத்து, அவர் இன்று சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் சோழன் விரைவு ரயிலில் இன்று கும்பகோணம் ரயில் நிலையம் வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மேற்கு வங்காளத்தில் இந்திய ராணுவத்தின் தேசிய பேரிடர் மீட்புப் பிரிவில் இரண்டாவது பட்டாலியனில் தான் பணியாற்றி வருகிறேன் என்றார். விடுமுறைக்காக, வீட்டிற்குச் செல்வதற்காகக் கடந்த ஜூன் 2ஆம் தேதி கோரமண்டல் அதிவிரைவு ரயில் மாலை மூன்று மணியளவில் கொல்கத்தா சாலிமார் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய நிலையில், மூன்று மணி நேரத்தில் ஏறத்தாழ ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் ஒடிசா மாநிலம் பாலசோர் வந்தபோது பயங்கர சத்தத்துடன் விபத்துக்குள்ளானது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் இந்திய ராணுவத்தின் பேரிடர் மீட்புப் பிரிவில் இருப்பதால், தன்னால் இயன்ற வரையில் முதியவர்கள், படுகாயமடைந்து நடக்க முடியாதவர்கள் எனப் பலரையும் இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்டேன் என்றார். முன்னதாக, தான் பயணித்த ரயில் பெட்டிக்குள் எல்லோரும் விபத்தைத் தொடர்ந்து பயத்தினால், அதிக சத்தத்துடன் அலறினர் என்றும், பின்னர் தாம் பணியிடத்தில் பெற்ற பயிற்சி அனுபவத்தின் அடிப்படையில், அவர்களை அச்சப்பட வேண்டியதில்லை; ஏதேனும் ரயில் பெட்டிகள் தடம் புரண்டிருக்கலாம் என்றதாக அமைதிப்படுத்தியதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ரயில் நின்றவுடன் அனைவரையும் பத்திரமாக இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Track restoration: ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்