தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

FCM பால் 250 மி.லிட்டர் நிறுத்தம் - "விற்பனை குறைவாக உள்ள சில பொருட்கள் நிறுத்தம்" - அமைச்சர் மனோ தங்கராஜ்! - Aavin statement on FCM milk

தஞ்சையில் புதிய பால் பண்ணை தொழிற்சாலை கட்டிட பணியின் பூமி பூஜையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார்.

தஞ்சையில் FCM பால் 250 மி.லிட்டர் நிறுத்தம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறிய அமைச்சர்
தஞ்சையில் FCM பால் 250 மி.லிட்டர் நிறுத்தம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறிய அமைச்சர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 10:46 PM IST

தஞ்சையில் FCM பால் 250 மி.லிட்டர் நிறுத்தம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறிய அமைச்சர்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 53 கோடி 55 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் திறனுடைய புதிய பால் பண்ணை தொழிற்சாலை கட்டிட பணியின் பூமி பூஜை நடைப்பெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டும் விழாக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கும், கொள்முதலை பெருக்குவதற்கும், பால் கையாளுதல் திறனை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் உள்ள ஆவின் ஒன்றியத்தில் 53 கோடி 55 லட்சம் ரூபாய் செலவில், ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் வகையில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்தப் பகுதி நிச்சயமாக பால் வளம் பெருகுவதற்கு அடிப்படையாக அமையும். பால் உற்பத்தியை பெருக்குவதற்கு பல்வேறு முயற்சியை மேற்கொண்டு இருக்கிறோம். அதற்காக விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குவது, கால்நடை தீவனங்கள் சிறந்த முறையில் வழங்குவது, கால்நடை அபிவிருத்திக்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது, கால்நடை பராமரிப்புக்கான மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்படுத்துவது என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

அப்போது, FCM 250 மி.லிட்டர் பால் டிச.1 முதல் நிறுத்தப்படுகிறது என ஆவின் நிர்வாகத்தில் இருந்து வெளி வந்த சுற்றறிக்கை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, அதற்கு பதில் கூறாமல் தடுமாறி, பொது மேலாளரை கூப்பிடுங்கள் எனக்கூறினார். ஆவின் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையை படித்துக் காட்டியபோது சற்று தடுமாறிய அமைச்சர், அந்த சூழலை சமாளித்து, "விற்பனை குறைவாக சில பொருட்கள் இருக்கிறது. அதனை குறைப்பதற்கான நடவடிக்கையாக இருக்கலாம்" என பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கால்நடை பராமரிப்புக்கு ரூபாய் 100 கோடியும், கால்நடை புதிதாக வாங்குவதற்கு ரூபாய் 90 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தீவிரமாக விவசாயிகளை சந்தித்து கடன் தேவை யார், யாருக்கு இருக்கிறது என்பது குறித்து உற்றுநோக்கி விண்ணப்பங்கள் பெற கோரியதன் அடிப்படையில், தற்போது 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கிறது.

அந்த விண்ணப்பங்களை மிக வேகமாக பரிசீலித்து கடன் வழங்குவதற்கு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஓரிரு நாட்களில் அத்தனை கடன்களும் வழங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக கடன் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். பின்னர் இதைத்தொடர்ந்து ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது எம்பி கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், ஆவின் பொது மேலாளர் சத்யா, மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details