தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 மாமன்ற உறுப்பினர்களில், திமுக 39, காங்கிரஸ் 2, அதிமுக 3, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், விசிக தலா ஒன்று என்ற ரீதியில் உள்ளனர். இந்நிலையில், இன்று (டிச.29) மாநகராட்சி மாமன்ற கூட்டம், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள படேல் மண்டபத்தில், மேயர் கே.சரவணன் (காங்) தலைமையிலும், துணை மேயர் சு.ப.தமிழழகன் (திமுக) மற்றும் ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விசிக மாமன்ற உறுப்பினர் ரூபின்ஷா அலெக்ஸ் மட்டும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் மொத்தம் 43 பொருட்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு இருந்தது. சென்னை மற்றும் தூத்துக்குடி புயல், மழை வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நேற்று (டிச.28) மறைந்த கேப்டன் விஜயகாந்த் மற்றும் விடுதலை போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான என்.சங்கரய்யா மறைவிற்கும் 2 நிமிடம் மௌனம் காத்தும், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கூட்டத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
தாராசுரம் காய்கறி அங்காடி தரைக்கடைகள் வாடகையினை, சதுர அடிக்கு ரூ.5 ஆக உயர்த்த இருந்த நிலையில், தரைக்கடை வணிகர்கள் வேண்டுகோளின் படி, அதனை ரூ.3.65 ஆக திருத்தி நிர்ணயம் செய்யப்பட்டு, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, துணை மேயர் சு.ப.தமிழழகன் (திமுக) இக்கூட்டத்தில் வைத்து, ஆணையரால் கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்ட விவாதப் பொருட்களில், 19 பொருட்களை சேர்க்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணம் என்ன? என கேள்வி எழுப்பி, அதற்கு விளக்கம் தர வேண்டும் எனக் கூறினார்.
மேலும், இந்த 19 பொருட்களும் பொதுமக்கள் சேவைக்கு அத்தியாவசியமான பணி என்றும் இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படக் காரணமாக அமையும் எனவும் தெரிவித்தார். அப்போது, இதற்கு பதில் அளித்த மேயர் கே.சரவணன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.3 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 19 தீர்மானங்களும் பரிசீலனையில் உள்ளது.
பரிசீலனை செய்து முடித்த பிறகு, அடுத்த கூட்டத்தில் அவை கொண்டு வரப்படும் என்றார். இதையடுத்து, இன்று இக்கூட்டம் நிறைவடைந்தது எனக் கூறி, கூட்டத்தை விட்டு வெளியேற முயன்றார் மேயர். அப்போது மேயரைக் கண்டித்து மாமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டதுடன், விடுபட்ட 19 தீர்மானங்களையும் நிறைவேற்றினால் தான் வெளியேற அனுமதிப்போம் எனவும் கூறினர்.