தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர் வீட்டில் 10 சவரன் நகை, சொகுசு கார் திருட்டு: தஞ்சையில் திருடர்கள் கைவரிசை - Thanjavur Jewel Theft In Dcotor House

தஞ்சாவூர்: மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள், சொகுசு கார் உள்ளிட்டவை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Jewel Theft In Thanjavur

By

Published : Oct 21, 2019, 10:48 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல் நகரைச் சேர்ந்தவர் முருகவேல்-சாந்தி தம்பதி. இத்தம்பதிக்கு தர்ஷனா என்ற மகள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். முருகவேல் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி முருகவேலும் சாந்தியும் வீட்டை பூட்டிவிட்டு மகள் தர்ஷனாவை பார்ப்பதற்காக சென்னைக்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவிலிருந்த 10 சவரன் தங்கநகை, 1/2 கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஆகியவற்றுடன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் காரையும் திருடி தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த முருகவேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டும், சொகுசுக் கார் இல்லாததைக் கண்டும் அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த பொருள்கள் சிதறிக்கிடந்ததைக் கண்டு நகை, பணம், சொகுசுக் கார் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து முருகவேல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிப்பதிவு

தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்தனர். அதன்பின், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களைச் சேகரித்தனர். அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: உறவினர் வீட்டில் உறவினரே கொள்ளை; மூன்றுபேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details