தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே கீழ அலங்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. அதன் அருகில் தனியார் பாரும் இயங்கி வந்தது. மேலும், டாஸ்மாக் கடை எதிர்புறம் தற்காலிக மீன் மார்கெட் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான குப்புசாமி(68), விவேக்(36) ஆகிய இருவரும் கள்ள சந்தையில் மது வாங்கி அருந்தியுள்ளனர்.
இந்த மதுவை குடித்த இரண்டு பேருக்கும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குப்புசாமி அங்கேயே உயிரிழந்தார். விவேக் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று பின்னர் உயிரிழந்தார்.
இந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையையும், அதன் அருகில் இருந்த பாரையும் சீல் வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், 21ஆம் தேதி இரவு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், அதில் இரண்டு பேரின் உடல்களிலும் சயனைடு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த ஆய்வில் மெத்தில் ஆல்கஹால் இல்லை என்றும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கள்ள மது குடித்த இருவர் பலி.. மதுவில் சயனைடு விஷம் கண்டுபிடிப்பு... திட்டமிட்ட கொலையா?